சிங்கப்பூர், ”உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருப்பது சரியல்ல,” என, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ‘நேட்டோ’ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
ஓராண்டைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்தப் போருக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் மறைமுக ஆதரவு வழங்கி வரும் சூழலில், மேற்கத்திய நாடுகளுக்கு இதில் பங்கு உள்ளது என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறியுள்ளதாவது:
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில், ரஷ்யாவின் செயல்பாடு மன்னிக்க முடியாதது. ஆனால், இந்த பிரச்னையில் உரிய தீர்வு வழங்காமல் மேற்கத்திய நாடுகள் மவுனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
நேட்டோ அமைப்பில் சேர்வது தொடர்பான விவகாரத்தினாலேயே ரஷ்யா ஏற்கனவே பிளவுபட்டது.
அப்போது கருத்து தெரிவித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தற்போது வெறும் பார்வையாளர்களாக, போரை வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. இந்த சூழலில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை ஊடகங்களும் வெளிப்படுத்துவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement