லண்டன் பேச்சு ராகுலுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் கடும் கண்டனம்

ஜெய்ப்பூர்: லண்டனில்  ராகுல் காந்தி பேசியதற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசியிருந்தார். இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சுற்றுலாத் துறை அமைச்சராக விஷ்வேந்திர சிங் உள்ளார். இவரது மகன் அனிருத், அம்மாநிலத்தின் காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில், “ராகுல் காந்திக்கு பித்து பிடித்து விட்டது. இல்லையென்றால், யாராவது ஒருவர் மற்றொரு நாட்டில் தனது நாட்டை அவமதிப்பாரா? அல்லது ஒருவேளை அவர் இத்தாலியை தனது நாடாக கருதி இருக்கலாம். இது பற்றி அவர் இந்தியாவில் பேசியிருக்கலாமே? அல்லது மரபணு ரீதியாக அவர் ஐரோப்பாவை விரும்புகிறாரா? மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாத அரசு,’’ என விமர்சித்துள்ளார்.  தனது மகனின் டிவிட்டர் குறித்து அமைச்சர் இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.