பெங்களூரு, கோல்கட்டாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிப்பறையில் புகை பிடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், சீல்டாவைச் சேர்ந்தவர் பிரியங்கா சக்ரவர்த்தி, 24. இவர் கடந்த 5ம் தேதி கோல்கட்டாவில் இருந்து இரவு 9:50 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிய ‘இண்டிகோ’ விமானத்தில் பயணித்தார்.
பெங்களூரு வந்தடைய அரை மணி நேரம் இருக்கும் போது, பிரியங்கா கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் சிகரெட் வாசனை வருவதை உணர்ந்த விமான ஊழியர்கள், கதவை திறக்கும்படி கூறினர்.
பிரியங்கா, தான் புகைத்த சிகரெட்டை, கழிப்பறையில் இருந்த குப்பை தொட்டியில் வீசினார். அவர் வெளியே வந்தவுடன், உள்ளே சென்ற ஊழியர்கள், குப்பை தொட்டியில் அணைக்காமல் கிடந்த சிகரெட்டில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து பிரியங்காவை, ‘கட்டுங்கடங்காத பயணி’ என விமான பைலட் அறிவித்தார். அதிகாலை 1:00 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடம், பிரியங்காவை ஊழியர்கள் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, ‘இண்டர்குளோப் ஏவியேஷன்’ பாதுகாப்பு பிரிவு உதவி மேலாளர் சங்கர், போலீசில் புகார் செய்தார்.
இதன்படி, மற்றவர்களின் உயிருக்கோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, பிரியங்கா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement