சென்னை: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் நாளை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் வரும் 10-ம்தேதி (நாளை) சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு முகாமுக்கும் தேவையான மருந்துகள், மாத்திரைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை மாவட்ட சுகாதார நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாமில் பங்கேற்கும் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் குறித்த விவரங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதைத் தவிர, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.