சென்னை: “ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை முறையாக அரசு அளிக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா, ஆர்.என்.ரவியா?” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பினார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அதில், மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பாஜக-வின் நிலைப்பாடு. இதை ஆளுநரிடமும் தெரிவித்துள்ளோம். தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தவறான சட்டம் என்பதே காரணம். தமிழக அரசு திருத்தம் செய்யாவிட்டால் நாளை நீதிமன்றத்தில் நிச்சயம் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு அதிகம். ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தெரிவித்துள்ள காரணத்தை பேரவை தலைவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்பு இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
அப்போது, அண்ணாமலை கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது, “ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை முறையாக அரசு அளிக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா, ஆர்.என்.ரவியா? ஆளுநர், எங்களிடம் என்ன விளக்கம் கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அண்ணாமலையிடம் ஆளுநர் சொன்னாரா? இந்த ரகசியங்களை எல்லாம் ஆளுநர், அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தி உள்ளாரா?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.