ராணுவ பயிற்சியில் விபரீதம் பீகாரில் பீரங்கி குண்டு பாய்ந்து 3 பேர் பலி

கயா: பீகாரில் ராணுவ பயிற்சி நடந்த போது பீரங்கி குண்டு பாய்ந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகி விட்டனர். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் குலர்வாத் கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது. அப்போது துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை சுட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில்  பீரங்கி குண்டு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் சூரஜ்குமார், அவரது மனைவி கஞ்சன்குமாரி, அவர்களது உறவினர் கோவிந்த் மஞ்ச் ஆகிய 3 பேர் பலியாகினர்.

அத்துடன் 6 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர். ஹோலி பண்டிகை கொண்டாடத்திற்கு மக்கள் தயாராகி கொண்டு இருந்த போது இந்த பீரங்கி குண்டு பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அறிந்ததும், போலீஸ் அதிகாரிகளும், உள்ளூர் நிர்வாகத்தினரும் அந்த பகுதிக்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த பயிற்சியின்போது, துப்பாக்கி சூடு பயிற்சி தளத்திற்கு உட்பட்ட பகுதியை கடந்து, இந்த கிராமத்திற்கு அடுத்திருந்த வேறு சில கிராமங்களுக்கும் சென்று பீரங்கி குண்டுகள் விழுந்து உள்ளன என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.