புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிறப்பு கூறு நிதி மூலம் நிலம் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் ரங்கசாமி பதில் அளித்தார். புதுச்சேரியில் பட்டியலினத்தினருக்கான சிறப்பு கூறு நிதியில் 49 சதவீதம் மட்டுமே செலவு செய்ததாக திமுக புகார் தெரிவித்திருந்தது. எஞ்சிய 51 சதவீதம் நிதியை செலவிடாதது தவறு என்று திமுக உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் அங்காளன் பேரவையில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பட்டியலினத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து பட்டியலினத்தவர் மேம்பாட்டு பணிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி: அமைச்சர் லட்சுமி நாராயணன்
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளர். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதில் அளித்தார். விமான நிலையத்திற்கு தேவையான 723 ஏக்கர் நிலத்தை தர தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறினார்.
புதுச்சேரி பட்ஜெட்: அதிமுக வரவேற்பு
புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்க பட்ஜெட்டில் அறிவிப்புகள் என்று அதிமுக அன்பழகன் குறிப்பிட்டார்.