சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை மட்டுமே இந்த இலவச சேவை கிடைக்கும். ‘மை ஆதார்’ எனும் தளத்தில் இலவசமாக இந்த புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் அதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை மக்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஆதார் அட்டை அறிமுகமானது. கோடான கோடி மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.