திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறி 28 நாள் மட்டுமே ஆன பிஞ்சுக் குழந்தை இறந்ததால் மனமுடைந்த தாய், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பூப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிஜி (38). அவரது மகன் பென் டோம் (7). இந்தநிலையில் லிஜிக்கு கடந்த 28 நாளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. நேற்று காலை தனது வீட்டில் வைத்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் லிஜியின் ஒரு குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது. அடுத்தடுத்து தனது 2 குழந்தைகளும் இறந்தது லிஜிக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இன்று காலை உறவினர்கள் அனைவரும் அருகில் உள்ள சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தனர். அப்போது லிஜியையும், பென் டோமையும் காணவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் அந்த பகுதியில் தேடிபார்த்தனர். அப்போது 2 பேரும் உடல்களும் வீட்டுக் கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 பேரது உடல்களையும் மீட்டனர். குழந்தை இறந்த சோகத்தில் மகனை கிணற்றில் போட்டு லிஜியும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பூப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.