திருவண்ணாமலை | அரசு பேருந்து மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை அடுத்த பெரியகல்லப்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் தனது தாய் சித்ரா(48) மற்றும் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் உறவினரான ராமலிங்கம் மனைவி இந்திராணி(55) ஆகியோரை அழைத்து கொண்டு வெறையூர் பகுதியில் இருந்து பெரியகல்லபாடிக்கு இருசக்கர வாகனத்தில் இன்று(16-ம் தேதி) இரவு சென்றார்.

வெறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தின் மீது, திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இந்திராணி உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விக்னேஷ், சித்ரா ஆகியோர் ஆம்புலன்சில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.

எனினும் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். 3 பேர் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக, சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வெறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.