பெங்களூருவில் சமோசா விற்று தினமும் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் த‌ம்பதி

பெங்களூரு: பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சிக்ஹார் வீர் சிங், நிதி சிங் ஆகிய இருவரும் ஹரியானாவில் பிடெக் பயோடெக்னாலஜி ஒன்றாக படித்தார்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும், பின்னர் காதலர்களாக மாறினார்கள். சிக்ஹார் வீர் சிங் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸில் எம்டெக் பயோ டெக்னாலஜி முடித்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக வேலை கிடைத்தது.

வீட்டை விற்று…: தன் காதலி நிதி சிங்கை திருமணம் செய்துகொண்ட சிக்ஹார், அவரை குருகிராமில் இருந்து பெங்களூரு அழைத்து வந்தார். இதனால் நிதி சிங் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியமாக பெற்றுக்கொண்டிருந்த தனியார் மருந்து நிறுவன வேலையை கைவிட நேர்ந்தது. இருவரும் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்தனர். இதற்காக தங்களது வீட்டை ரூ.80 லட்சத்துக்கு விற்றனர்.

அந்த தொகையை முதலீடாகக் கொண்டு, சமோசா கடை திறக்க திட்டமிட்டனர். ஏனென்றால் பெரும்பாலான இந்தியர்கள் சமோசாவை விரும்பி உண்பதால், அதனையே தொழிலாக மாற்றினர். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டியில் ‘சமோசா சிங்’ என்ற பெயரில் சமோசா கடையை திறந்தனர். அதில் எதிர்பார்த்ததை விட நல்ல வருமானம் கிடைத்தது. அதனால் அடுத்த 6 மாதங்களில் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, சர்ஜாபூர், இந்திரா நகர், எம்.ஜி. சாலை உள்ளிட்ட 12 இடங்களில் கடைகளை திறந்தனர்.

பலவகை சமோசா: வெஜ் சமோசா, கடாய் பனீர் சமோசா, பட்டர் சிக்கன் சமோசா என வகை வகையாக சமோசா விற்று விற்பனையை பெருக்கினர். இதனால் பெங்களூருவை தாண்டி 9 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட சமோசா கடைகளாக தொழில் விரிவடைந்தது. இந்த கடைகளில் ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட‌ சமோசாக்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.45 கோடி வருமானம் வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு சமோசா விற்பதன் மூலம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார்கள். இதையடுத்து சமோசா வியாபாரத்தை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்த இருப்பதாக சிக்ஹார் வீர் சிங் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.