தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியீடு : ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்!!

சென்னை :  தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் இரண்டாக பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது̣. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 29 சுங்கச் சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. இந்த தகவல்களை அண்மையில் வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை மற்றும் மதுரைக்கு சென்று திரும்பும் வாகனங்கள் ஏற்கனவே செலுத்தும் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.55 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகில் அமைந்துள்ள சுங்கச் சாவடியை ஒருமுறை கடந்து செல்லும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் 70 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சிற்றூர்ந்து இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.110ல் இருந்து ரூ.120 ஆக சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட உள்ளது. இதே போல் பேருந்து டிரக்குகளுக்கு 235 ரூபாயில் இருந்து 255 ரூபாய் என சுங்கக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு 255 ரூபாயில் இருந்து 280 ரூபாயாகவும் பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்களுக்கு 370 ரூபாயில் இருந்து ரூ.400 ஆகவும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. அதிக அளவு கொண்ட வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.485 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.