தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மையம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் பேச்சு

புதுடெல்லி: தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மையம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக எம்.பி.யான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து தருமபுரி தொகுதியின் எம்.பி.,யான செந்தில்குமார் விதி எண் 377 கீழ் மக்களவையில் பேசியதாவது: ”தருமபுரி மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் அம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். இந்த ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த 2010 முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் முலம் நெக்குந்தி கிராமத்தில் அதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.

இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் அந்த இடத்தினை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ஆனால் அதன் பிறகு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கான எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தொழில்துறையில் பின் தங்கிய தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் விரைவாக தொடங்கினால் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் இப்பணியை விரைவாக தொடங்க வழிவகை செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோருகிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.