புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம்.
எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமைஇல்லை. பாஜகவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பாஜகவை முந்தினால் மட்டுமே அந்த கட்சிக்கு சவால் விடுக்க முடியும்.
இந்துத்துவா, காந்திய கொள்கை, அம்பேத்கர் கொள்கை, சோசலிஸ்ட், கம்யூனிசம் என பல்வேறு சித்தாந்தங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுபட்டு உள்ளன. இந்த சூழலில் பாஜகவை எந்த வகையிலும் தோற்கடிக்க முடியாது. காங்கிரஸை புதுப்பிக்க அந்த கட்சிக்கு சில திட்டங்களை கூறினேன். ஆனால் எனது முயற்சி வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பாரத ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார். இதனால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.