ராகுல் காந்தி தகுதி நீக்கம்: ஏன் இவ்ளோ அவசரம்? இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!

வயநாடு மக்களவை தொகுதியில்
காங்கிரஸ்
கட்சியின் எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கான பிரச்சாரத்தில் தான் பேசியது தனக்கே வினையாக வந்து முடியும் என நினைத்திருக்க மாட்டார். பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் திடீரென இப்படி ஒரு அதிரடி நடந்துள்ளது.

மோடி அவதூறு பேச்சு

”அதெப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்?”
எனப் பேசி ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கினார். இவர் நீரவ் மோடி, லலித் மோடி குறித்து பேச அப்படியே பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பரபரப்பு தீர்ப்பு

இதில் நேற்றைய தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

ராகுல் தகுதி நீக்கம்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கிய நிலையில் ஏன் இந்த அவசரம்? எனப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

கருப்பு நாள்

இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ட்விட்டரில் ”Black Day for Indian Democracy” என்ற வார்த்தை பெரிதும் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் எனக் குறிப்பிட்டு பாஜக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ட்விட்டரில் வைரல்

இதுதொடர்பாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் வருகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உறங்கி கிடக்கின்றன. இந்த பிரச்சினையில் இவ்வளவு வேகமாக செயல்பட்டு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி விட வேண்டும் என்ற கடமை உணர்ச்சி வெளிப்பட்டு விட்டது எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் வரலாறு உங்கள் மீது இரக்கப்படும். உங்கள் பாட்டி இந்திரா காந்தியை போல நீங்களும் மீண்டு வருவீர்கள். அதுவரை நீங்கள் முழு மன வலிமையுடன் இருங்கள் எனப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோரை ஒப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.