பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? – குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலை பாடியதன் மூலம் இங்கு புகழ்பெற்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல முன்னனி இசையமைப்பாளர்களின் இசைகளில், ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சமீபத்தில் லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, அங்கே தங்கியிருந்த விடுதியில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்ததாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

image

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் இன்று தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு இங்கிலாந்தில் வைத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வேகமாக குணமடைந்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம், ப்ரைவசியையும் உங்கள் ஆதரவையும் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.