ராகுல் காந்தி தகுதி நீக்கம் – இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு – சசி தரூர்

காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது

இதை தொடர்ந்து காங்கிரசார் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது. மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரசார் பெரும் திரளாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் இந்திய ஜனநாயகத்திற்கு பாதிப்பு என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

இது (சத்யாகிரகம்) காங்கிரஸ் கட்சி அல்லது ராகுல் காந்தியைப் பற்றியது மட்டுமல்ல, இது இந்திய ஜனநாயகம் பற்றியது. இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று உலகுக்கு எடுத்துரைக்கும் பிரதமர் இருக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் எழுப்ப அனுமதிக்காதது நமது ஜனநாயகத்திற்கு நல்லதா , இது நம் நாட்டுக்கு நல்லதா.

ஜனநாயகத்தின் அமைப்பைப் பற்றியது, மக்கள் சுதந்திரமாக பேசுவதற்கும், தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கும், அரசாங்கத்தை கேள்விகளால் சவால் செய்வதற்கும், அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூறுவதற்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும். எம்.பி . பதவி நீக்கம் என்பது இது இந்திய ஜனநாயகத்திற்கு தான் பாதிப்பு. ராகுல் காந்திக்கு அல்ல. என தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.