டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது. மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், திடீரென எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி, துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.