ராகுல் காந்தி தகுதி நீக்கம் : காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் போராட்டம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து

கட்சி நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

ராகுல் காந்தியின் பின்னால் நாங்கள் நிற்கிறோம்; அவர் ‘காந்தி’, சாவர்க்கர் அல்ல; ஜனநாயகத்தை காப்போம்; அரசியலைப்பு சட்டத்தை காப்போம் என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்த அவர்கள் பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை, “தடையாணை வாங்கி இருந்த வழக்கை எடுத்து நடத்தி, 24 நாட்களுக்குள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று எங்கும் காணாத தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு போட்டவரே தடை வாங்குகிறார். தீர்ப்பு வந்து 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். இது முழுக்க முழுக்க பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம்” என்று கூறினார்.

இது மட்டுமல்லாமல் சட்டப் பேரவை முடிந்த பின்னர் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக கூறுவது கவனம் பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.