புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுக்கு முன்பே பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே சில பணிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓட்டலில் உணவு வழங்கும் சேவை செய்வது முதல் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை செய்வது வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் வந்துவிட்டன. இந்த தொழில்நுட்பம் குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1964-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி பிபிசி தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சியில் ஏஐ குறித்து கிளார்க் பேசியுள்ளார். அதில், “வரும் காலத்தில் மிகவும் புத்திசாலியாக மனிதனோ, குரங்குகளோ இருக்காது. அது இயந்திரமாகத்தான் இருக்கும். அவை சிந்திக்கவும் தொடங்கும்” என கூறுகிறார்.
ஒரு நிமிடம் 42 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை மாசிமோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கும் பகிர்ந்துள்ளார். இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர்களில் பலர் ஆர்த்தரின் கணிப்பை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.