காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவா-பூமாதேவி தம்பதியினர். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். இதில், பூமாதேவிக்கு படப்பை ஒரத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவருடன் கல்லாத தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் சிவாவிற்குத் தெரியவந்ததனால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பூமாதேவி, கள்ளக்காதலன் சுந்தருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த, பூமாதேவியின் கணவன் சிவா, அவர்களைப் பின்தொடர்ந்து, விரட்டிச்சென்று மனைவி பூமாதேவியைப் பிடித்து இழுத்ததில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்தக் காயம் அடைந்தார்.
அதன் பின்னர், சிவா மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூமாதேவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமாதேவி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.