மது பிரியர்களுக்கு ஷாக்? இனி மது வாங்கினால் கூடுதலாக 10 ரூபாய் வசூல்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது.

இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை , டாஸ்மாக் மதுபான கடைகளில் ஓப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.