மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரியின் மகன் சரவண மருது. போட்டோகிராபரான இவர் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கிறார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாயார் தொடர்புகொண்டபோது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ராஜேஸ்வரி புகார் கொடுத்தார். போலீஸ் விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அந்த அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் கண்டாக்கிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் வர, அவரை அழைத்து வந்து விசாரித்தபோதுதான் சரவணமருதுவை கொன்று புதைத்துவிட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.
போலீஸ் தொடர்ந்து விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன்னர் சரவண மருது ஏதோ ஒரு காரணத்துக்காக கண்டாங்கிபட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு சக்திவேல் மனைவிக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறி, அடிக்கடி தனியாக சந்தித்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் சக்திவேலுக்கு தெரிந்து, இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமான சக்திவேல், சரவண மருதுவை கொலைசெய்ய திட்டமிட்டார்.
மதுரை திருவாதவூரில் வசித்து வரும் உறவினர்களான முருகன், ராஜபிரபுவிடம் விஷயத்தை சொல்லி சரவண மருதுவை கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.
சக்திவேல், தன் மனைவிக்கு தெரியாமல் அவருடைய செல்போனிலிலிருந்து `திருவாதவூர் கண்மாய்க்கு வா,’ என்று சரவண மருதுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
இதைப் பார்த்து சரவண மருது கடந்த 14-ம் தேதியன்று வீட்டிலிருந்து கிளம்பி திருவாதவூர் கண்மாய்க்கு செல்ல, அங்கு சக்திவேல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். அங்கு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதோடு சக்திவேலுடன் முருகன், ராஜபிரபுவும் சேர்ந்து சரவண மருதுவை கடுமையாக தாக்கி கொலைசெய்திருக்கின்றனர். பின்பு உடலை கண்மாய்ப் பகுதியிலேயே குழி தோண்டி புதைத்திருக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சக்திவேல், முருகன், ராஜபிரபு ஆகியோரை போலீஸ் கைதுசெய்தது. தன் மனைவியின் படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் மிரட்டி வந்ததால் கொலைசெய்தேன் என்று சக்திவேல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. உடல் புதைக்கப்பட்ட இடத்தை இவர்கள் அடையாளம் காட்ட சரவண மருதுவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
கொலைசெய்து புதைத்துவிட்டு கொலைகாரர்கள் கமுக்கமாக நடமாடி வந்து, தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.