புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,509 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 13,509 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கரோனா தொற்று பாதிப்பு 2.7 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71 ஆகவும் உள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 68 ஆயிரத்து 321 ஆக உள்ளது. ஒரு நாளில் 1,396 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் இரண்டு பேர், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர், கேரளாவில் 8 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 862 ஆக உள்ளது.
இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 16 ஆம் தேதி தொற்று பாதிப்பே இல்லை என்று இருந்த நிலையில் நேற்று மட்டும் டெல்லியில் 300 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.