கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10-க்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகைக்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். காடுகளின் நடுவே இந்த ரயிலில் பயணிக்கும்போது, இயற்கை எழில் காட்சிகளை கண்டு களிக்கலாம் என்பதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35-க்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். ஊட்டியில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது.

இருப்பினும் அங்கு பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் விடுமுறை காரணமாக மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.