'பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா?' – கெஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் தரப்பில் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய குஜராத் ஐகோர்ட்டு நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்கவேண்டும் என்று குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த தகவலைக் கேட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்த அபராத தொகையை குஜராத் மாநில சட்டப்பணிகள் சேவை ஆணையத்திடம் 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

“பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா? பிரதமர் ஏன் கோர்ட்டில் தனது பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட மறுத்துவிட்டார்?

அவரது சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது? படிப்பறிவில்லாத அல்லது குறைவான கல்வியறிவு பெற்ற பிரதமர் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்.”

இவ்வாறு கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.