தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த அவர், அதைப்போலவே தமிழகத்திலும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க வேண்டும் என அப்போதே திட்டமிட்டார். அதற்கான பணிகளை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்கட்டமாக அனைத்து விளையாட்டுகளும் பயிற்சியாளர்களை நியமிக்கும் பொருட்டு அண்மையில் புதிய பயிற்சியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்காக சென்னை அருகே இருக்கும் செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் மதிப்பிலான இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு திடல் அமைக்க உள்ள காலி இடங்களின் வழித்தடம் மற்றும் இடத்தின் மாதிரி வரைப்படம் மூலம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், அதிலுள்ள சிக்கல்கள், ஆக்கிரமிப்பு பிரச்சனைகள், வழித்தடங்கள் குறித்தெல்லாம் விவரித்தனர். இதனை கேட்டுக் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்போர்ட்ஸ் சிட்டி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்கள்.
அதற்காக இரண்டு இடங்கள் ஆய்வு செய்ய உள்ளேன். அதில் ஒரு இடம் செம்மஞ்சேரியில் உள்ள இந்த இடத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன். முதலமைச்சரிடம் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடம் கிட்டத்தக்க 105 ஏக்கர் கொண்டது. இந்த இடம் சிறப்பாக இருக்குமா?. சாலை வசதி உள்ளிட்ட மற்ற வசதிகளையும் ஆய்வு செய்துள்ளோம். மற்றொரு இடமும் இருக்கிறது. இவற்றின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்போர்ட்ஸ் சிட்டி உலகம் தரத்தில் இந்தியாவில் சிறப்பானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.