டோக்கியோ, ஜப்பானில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று, உணவருந்தும் போது வாடிக்கையாளர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில், மொபைல் போன்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, தியேட்டரில் படம் பார்க்கும் போது, உணவருந்தும் போது என பல நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள, டெபுசான் என்ற பிரபல ஹோட்டல், மொபைல் போன் பயன்பாட்டை குறைக்க அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் உணவருந்தும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் கோட்டா காய் கூறியதாவது:
ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவை உட்கொள்ளாமல், மொபைல் போனை பயன்படுத்துவதை பல முறை பார்த்துள்ளேன். இதனால், உணவு குளிர்ச்சியாகி விடுகிறது. மேலும், மற்ற வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரமும் அதிகரிக்கிறது. இந்த தடை நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் உணவை ருசித்து உண்பதுடன், மொபைல் போன் பழக்கத்தில் இருந்தும் விடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement