புதுடில்லி, ‘ஒரே பாலின உறவு குற்றமாகாது என்பது ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது அதன் அடுத்த நிலையாக இருக்கும். திருமணம் குறித்த கருத்துருவில் உரிய மாற்றம் செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது’ என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
குடும்ப முறை
மூன்றாவது நாளாக நேற்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
திருமணம் தொடர்பான கருத்துருவில் திருத்தம் செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது.
எதிர் எதிர் பாலினத்தவர் உள்ள குடும்பம் போல், ஒரே பாலின குடும்பத்தால், குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை.
ஒரு ஆண் குடிக்கு அடிமையாகி, மனைவியை அடிப்பதும், இதனால், குழந்தைகள் மனரீதியில் பாதிக்கப்படுவதும், தற்போது பரவலாக காண முடிகிறது.
அதனால், ஆணும், பெண்ணும் இணைவதுதான் சிறந்த திருமணம், சிறந்த குடும்ப முறை என்று கூற முடியாது.
ஒத்தி வைப்பு
கடந்த, ௨௦௧௮ல், ஒரே பாலின உறவு குற்றமாகாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருமணம் போன்ற வாழ்க்கையில் இருக்கும் அவர்களுக்கு, திருமண உறவு வழங்க வேண்டியது அதன் அடுத்தகட்டமாக இருக்கும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை, ௨௪ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்