சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான நாடுகளில் ஒன்று சூடான்.. அங்கே அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அது சில ஆண்டுகளுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது.
ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்ட நிலையில், அங்கே அதன் பின்னர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
சூடான்: இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கேயே இருக்கும் பல துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக அங்கு மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே தாக்குதல் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. ராணுவத்தினரும் கிளர்ச்சியில் ஈடுபடும் துணை ராணுவப் படையும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல இரு தரப்புமே தாக்குதலை எதிர்த்தரப்பே முதலில் தொடங்கியதாகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தொடரும் இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கே உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அங்குள்ள இந்தியர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவ உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
சூடானில் உள்ள இந்தியர்கள் உதவி பெறத் தொலைப்பேசி: 1800 11 8797 (இலவச எண்) +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905; மொபைல்: +91 9968291988 ஆகியோ மொபைல்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர வேண்டாம்: இதனிடையே சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிதாக அறிவுறுத்தியுள்ளது. அங்கு சூடானின் ராணுவ ஆட்சிக்கும் முகமது ஹம்தான் டாக்லோ தலைமையிலான துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் நடக்கும் நிலையில், தாக்குதல் நடக்கும் பகுதியில் தூதரகம் அமைந்துள்ளதால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூடான் இந்தியத் தூதரகம் இயங்கி வந்தாலும் கூட, தூதரக கட்டிடத்தில் யாரும் இல்லை என்றும் இதனால் அங்கே யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்டூமில் தான் இந்தியத் தூதரகம் உள்ளது. கார்டூம் விமான நிலையத்திற்கு அருகில் தான் இந்தியத் தூதரகம் உள்ள நிலையில், அது தாக்குதல் நடக்கும் பகுதிக்குள் இருப்பதால் அலுவலகத்திற்கு யாரும் செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “நாங்கள் இந்தியர்களுக்கு எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். தூதரகம் செயல்பட்டாலும் தூதரக கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் அதிக சண்டை நடப்பதால் அங்கு நேரில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். இந்தியத் தூதரக அதிகாரிகள் யாரும் தூதரக கட்டிடத்தில் இல்லை. அதிகாரிகள் நகரில் இருக்கும் தங்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்து வருகின்றனர்.
சூடானில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு ஓரளவு தெரியும். இருப்பினும், அவர்களின் பாதுகாப்பு கருதி எத்தனை பேர் இருக்கிறார்கள்.. எங்கே இருக்கிறார்கள் போன்ற தகவல்களைப் பகிர நாங்கள் விரும்பவில்லை. சில இந்தியர்களின் சமூக வலைத்தள போஸ்டுகளை பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டோம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்றார்.
கடும் தாக்குதல்: 50 லட்சம் மக்கள் வசிக்கும் கார்டூமில் கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. அங்கே இருக்கும் மக்கள் மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தரப்பில் இருந்து சூடான் அரசைத் தொடர்பு கொண்டு இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது வெளிநாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், அவர் சூடானின் நிலைமை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரிடம் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.