புதுடில்லி: ‘இருவரும் மென்பொருள் இன்ஜினியர்களாக பணியாற்றுகிறீர்கள். ஒருவர் காலையில் வேலைக்கு போனால், மற்றொருவர் மாலையில் வேலைக்கு போகிறீர்கள். சேர்ந்து வாழ்வதற்கு ஏன் ஒருமுறை முயற்சிக்கக் கூடாது’ என, விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் தம்பதியினர், விவாகரத்து கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா அமர்வு கூறியதாவது:
பெங்களூரில் இருவரும் மென்பொருள் இன்ஜினியர்களாக பணி புரிகிறீர்கள். ஒருவர் காலையில் வேலைக்கு போனால், மற்றொருவர் மாலையில் வேலைக்கு செல்கிறீர்கள். இதில் குடும்ப வாழ்க்கைக்கு எங்கு நேரமிருக்கும். சேர்ந்து வாழ்வதற்கு ஏன் இருவரும் ஒரு முயற்சியை மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அமர்வு கூறியது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் சமரச மையத்தில் இருவருக்கும் இடையே பேச்சு நடத்தப்பட்டது.
அதில் விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருந்தனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதன்படி கணவர், 12.51 லட்சம் ரூபாயை ஒருமுறை ஜீவனாம்சமாக வழங்குவது என்று இறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் கூறினர்.
இதையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement