பண்ருட்டி அருகே சோகம் : மதுபோதையில் தகராறு – கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு.!
கடலுார் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், அருள்குமாருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதனால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி ஜோதிடரை சந்தித்து பரிகாரம் கேட்டுள்ளார். அவர் கூறியபடி ஊரில் உள்ள வீரன் கோயிலில் தனது குழந்தைகளுடன் இரவில் படுத்து உறங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், முத்துலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்ற போது, மது போதையில் வீட்டுக்கு வந்த அருளின் கால்பட்டு கேனில் இருந்த மண்ணெண்ணெய் கீழே ஊற்றியுள்ளது.
மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி இது தொடர்பாக அருளிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு வந்த அருளின் தாயார் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு குழந்தைகளை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த கணவர் அருளும், தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டார். அப்போது முத்துலட்சுமி தீக்குச்சியை பற்ற வைத்ததால், இருவர் மீதும் தீப்பற்றி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.