சென்னை: ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகுமா என்பது குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சுமார் 9,900 கடைகள் மட்டுமே பகுதி நேர கடைகளாகவும் மீதமுள்ளவை அனைத்தும் முழுநேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன.
தமிழக கூட்டுறவுத்துறையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற செய்திகள் வலம்வந்தபடி உள்ளன..
ராதாகிருஷ்ணன் விளக்கம்: இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் பேட்டி தந்திருந்தார்.. அப்போது அவர் சொன்னபோது, “நுகர்வோருக்கு திருப்திகரமாக ரேஷன் கடைகள் அமைய வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் வீட்டிற்கே பொருட்களை வழங்குவதில் சிரமம் இருக்கிறது. 2.23 கோடி குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்களது வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், உடல் ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு பொருட்களை கொண்டு வழங்கி வருகிறோம்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் சமீபகாலமாகவே எழுந்து வருகின்றன.. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தவிர, உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த பொருட்களை வாங்க சொல்லித்தான், கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களாம்..
கூட்டுறவுத்துறை அதிரடி: இந்த பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தியும் பகீரை கிளப்பி வந்ததால், கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகி விட்டனர். இதனால், திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாக அட்டைதாரர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, கூட்டுறவுத்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.
இதுகுறித்தும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ரேஷன் கார்டு குறித்து தற்போது தமிழகத்தில் ஒரு போலியான தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் 3 அல்லது 4 மாதங்கள் வரையில் வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும், ஆதலால் ஏதேனும் ஒரு பொருளை அவ்வப்போது வாங்கிக்கொள்ள வேண்டும் என நம்பப்படுகிறது.
ரேஷன் கார்டு: ஆனால், அது உண்மையல்ல.. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. அது வெறும் வதந்திதான்.. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.. இந்தியாயாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின் படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்.
ரேஷன் கடையின் பெயரே நியாய விலைக்கடை என்பதாகும்.. அதனால், அநியாயமாக அதில் எந்த பணியும் செய்யக்கூடாது. ரேஷன் கடைகளில் சோப்பு, சீப்பு, கண்ணாடி என விரும்பும் பொருள் இருந்தால் வாங்கட்டும். ஆனால், டார்க்கெட் கொடுப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.. அதுபோன்று எந்த கட்டாயமும் இல்லை. மக்கள் விரும்பும் பொருட்களை மக்கள் வாங்கலாம். விருப்பமில்லை என்றால் வாங்கத்தேவையில்லை.
அபராதம் : ரேஷன் அல்லாத பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களை எந்த காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பதாக சொல்கிறார்கள்.. எந்தளவிற்கு தரமான ஆய்வு என்பதுதான் முக்கியம். ஆய்வின் தரத்தை உயர்த்தி எண்ணிக்கையை குறைக்க உள்ளோம். ஆய்வு செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது அபராதம் விதிப்பதை தவிர்த்து, அவர்களுக்கான பாதுகாப்பை தெரிவிக்க உள்ளோம்” என்றார்.