மே தினம் உழைப்பிற்கான தினம்.. உரிமைகளின் தினம்.. உழைக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்

மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களுக்கான வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி திட்டம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மூலக்காரணமான மே தினப் போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1800களில் மேற்கத்திய நாடுகளில் தொழிற்சாலைகள் பெருகத் துவங்கின. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஓய்வு ஒளிச்சலின்றி சுமார் 20 மணி நேரம் வரையிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து, 1806ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். கோரிக்கையை ஏற்று 10 மணி நேர வேலைச் சட்டத்தை அமல்படுத்தியது அமெரிக்கா.

மற்ற நாடுகளிலும் இக்கோரிக்கை வலுப்பெறவே, ஆஸ்திரேலிய தொழிலாளர்களோ 1858ம் ஆண்டில் ஒருபடி மேலேச் சென்று 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் பொழுதுபோக்கு என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை துவங்கினர். இக்கோரிக்கையை அவர்கள் வெற்றிகரமாக வென்றெடுக்கவும் செய்தனர்.

இது மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவே, 1886-ம் ஆண்டு மே மாதம் முதல், 8 மணி நேரம் தான் வேலை நேரம் என்ற தீர்மானம் 1884-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களால் கலவரங்கள் வெடித்து பலரது ரத்தம் சிந்தப்பட்டது. மற்ற நாடுகளிலும் போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்கள் படிப்படியாக வெற்றியைப் பெற்றதை நினைவு கூறும் வகையிலேயே மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மே தினம் சென்னையில் தான் 1923ம் ஆண்டில் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரால் கொண்டாடப்பட்டது. இன்று உலகில் சுமார் 80 நாடுகளில் மே 1ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.