சென்னை: நடிகர் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க ஆசை ஆசையாக டிக்கெட்டுகளுடன் தியேட்டருக்குள் நுழைந்த நரிக்குறவ மக்களை உள்ளே விட முடியாது என ரோகிணி தியேட்டர் ஊழியர் அவமானப்படுத்திய வீடியோ தீயாக பரவிய நிலையில், பெரிய போராட்டமே வெடித்தது.
விஜய்யின் வாரிசு படத்துக்கும் எங்களை உள்ளே விடலைங்க என அந்த நரிக்குறவ பெண் பேசியதை பார்த்து பலரும் கண் கலங்கினர்.
இந்நிலையில், 100 பழங்குடியின மக்களை அழைத்துக் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களுடன் தியேட்டரில் படம் பார்த்து செம மாஸ் காட்டி உள்ளார்.
ரோகிணி தியேட்டரில் நடந்த தீண்டாமை: சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியான பத்து தல படத்தை பார்க்க ரோகிணி தியேட்டருக்கு சில நரிக்குறவ மக்கள் குழந்தைகளுடன் சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே விட முடியாது என தியேட்டர் ஊழியர் தடுத்து அனுப்பியதும், அதனை இளைஞர் ஒருவர் தட்டிக் கேட்டு வீடியோ எழுத்து வெளியிட அந்த பிரச்சனை அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது.
பிரச்சனை சூடு பிடித்த நிலையில், தடுத்து நிறுத்தப்பட்ட மக்களை தியேட்டருக்குள் அனுமதித்து படம் பார்க்க வைத்த ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அதற்கு கொடுத்த விளக்கம் மேலும், ரசிகர்களையும் பிரபலங்களையும் கொந்தளிக்கச் செய்தது.
அவங்களும், மனுஷங்கதான் தியேட்டருக்குள் தீண்டாமை இருக்கவே கூடாது என பல பிரபலங்கள் அந்த தியேட்டருக்குத் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
100 பழங்குடியின மக்களுடன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்: இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் 100 பழங்குடியின மக்களை அழைத்துக் கொண்டு யாத்திசை திரைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த் கண்டு களித்தார்.
அவருடன் மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் பிரபாகரன் தியேட்டருக்குச் சென்று பழங்குடியின மக்களுடன் யாத்திசை படத்தை கண்டு ரசித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பழங்குடியின மக்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
யாத்திசைக்கு விருது தரணும்: மேலும், படம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் யாத்திசை திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு இந்த படத்துக்கு கண்டிப்பா விருது கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.