சாத்தூர்: சட்டவிரோத வெடி தயாரிப்பு; பட்டாசுக்கடை வெடிவிபத்தில் ஒருவர் உடல் கருகி பலி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில், பட்டாசுக்கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் வைரமுத்து (வயது 40). அதே கிராமத்தில் `ஸ்ரீ வேணி’ எனும் பெயரில் பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்தப் பட்டாசுக்கடை அருகே, ஷெட் அமைத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக வைரமுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல இன்று பட்டாசு தயாரிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெடிவிபத்து

இதனால் பட்டாசுகள் அங்கும் இங்குமாக வெடித்துச் சிதற ஆரம்பித்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளிலும் தீப்பொறிபட்டு, அவை வெடித்துச் சிதறின. கரும்புகை கக்கியநிலையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த வெடிவிபத்தில் கடையின் முன்பு நிறுத்திவைத்திருந்த இரண்டு டூவீலர்கள், கார் உட்பட அனைத்து பொருள்களும் கருகி நாசமாகின. தொடர்ந்து வெடிவிபத்து குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புப் படையினர், விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட முயன்றனர். ஆனால், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்தவண்ணம் இருந்ததால், மீட்புப்பணிகளைத் தொடங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

மீட்புப்பணி

தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துப் பட்டாசுக்கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினர் அணைத்தனர். இந்த வெடிவிபத்தில், கடைக்குள் உடல் சிதைந்த நிலையில் ஓர் ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) எனத் தெரியவந்தது. மேலும், இந்த வெடிவிபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.