பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகிய அரா ஊடக நிறுவனங்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தன.

விசேடமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது சிறுவர்களின் அடையாளங்கள் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது தமது நிறுவனம் தரத்தை பின்பற்றுவதாக அரச ஊடகங்களின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு ஒன்றியத்தின் அடுத்த கூட்டத்துக்கு அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்புவிடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, இந்நாட்டில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலைமையை உயர்த்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, குறைந்தபட்ச தரநிலைகளில் உரிய நிறுவனங்களை நடத்துதல், சிறுவர்களை பராமரிக்கும் பணியாளர்களின் பற்றாக்குறை, இந்நிறுவனங்களின் சுகாதாரப் பராமரிப்பு இன்மை, சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுவர் இல்லங்களை முறையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு, இலங்கையிலுள்ள சிறுவர் இல்லங்கள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கியுள்ளதாகவும் அவற்றில் பயிற்சிபெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துக்கு போதுமான ஏற்பாடுகளை ஒதுக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் முக்கியத்தும் தொடர்பில் இதன்போது விரிவாக முன்வைக்கப்பட்டதுடன், 18 வயதைத் தாண்டிய சிறுவர்களை சமூகமயப்படுத்துவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றின் தேவை மற்றும் அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கான மாற்று பாதுகாப்பு பிரேரணைகளாக வளர்ப்புப் பெற்றோர் முறையை அறிமுகப்படுத்தல், உறவினர்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவருதல், உள்ளூர் தத்தெடுப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதுபோன்று, சிறுவர் சந்தேக நபர்கள் தொடர்பான பிரேரணைகளாக சிறிய குற்றங்கள் தொடர்பில் இணக்க சபைகளுக்கு மாற்றுதல், வேறு மாற்றுத் தண்டனைகளுக்கு உள்ளாக்குதல், இறுதி மாற்றீடாக நிறுவன ரீதியான சீர்திருத்தத்தை பயன்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ மயந்த திசாநாயக்க, ஒன்றியத்தின் செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.