28 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி

கடந்தாண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருது என என இரண்டு உயரிய விருதுகள் கிடைத்தன. ராஜமவுலியின் படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வரும் இசையமைப்பாளர் கீரவாணி எனும் மரகதமணியின் திரையுலக பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இசையமைத்திருந்தாலும் சமீபகாலமாக தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மரகதமணி. இந்த நிலையில் தமிழில் சந்திரமுகி 2 மற்றும் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையடுத்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் மேஜிசியன் என்கிற படத்திற்கு இசையமைக்கிறார் மரகதமணி. விஜீஷ் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடிக்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த படத்தின் துவக்க விழாவில் மரகதமணியும் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் 1991ல் மம்முட்டி நடித்த நீலகிரி என்கிற படத்திற்கு முதல் முதலாக இசையமைத்திருந்தார் மரகதமணி. அதைத்தொடர்ந்து 1992ல் சூரியமானசம் மற்றும் 1995ல் அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த தேவராகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார் மரகதமணி அந்தவகையில் கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் மரகதமணி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.