ஒடிசா ரயில் விபத்து | தேடப்பட்டு வந்த 8 பேரில் மூவர் பத்திரமாக உள்ளனர்: தமிழக அரசு தகவல் 

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்துள்ளது. எஞ்சிய 5 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. மேலும், மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுபபாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள (1) நாரகணிகோபி, ஆண், வயது – 34 , (2) கார்த்திக், ஆண், வயது -19, (3) ரகுநாத், ஆண். வயது – 21, (4) மீனா, பெண், வயது – 66, (5) எ. ஜெகதீசன், ஆண், வயது – 47, (6) கமல், ஆண், வயது – 26, (7) கல்பனா, பெண், வயது – 19, (8) அருண், ஆண், வயது -21, இந்த 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டிருந்தது.

5 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்த 8 பேரில், கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கமல் என்பவர் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் சக பயணிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 3 பேர் தவிர்த்து, கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா மற்றும் அருண் ஆகிய 5 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் குறித்த தகவல்களை, மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்களான, கட்டணமில்லா தொலைபேசி – 1070 மற்றும் செல்பேசி – 9445869843 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.