இந்திய பந்துவீச்சு தாக்குதல் ஆஸ்திரேலியாவை விட குறைவானது என்று நினைக்க வேண்டாம் – ஆஸி. முன்னாள் வீரர்

மெல்போர்ன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. கடந்த முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தவற விட்ட இந்திய அணி இந்த முறை அதை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதல் ஆஸ்திரேலியாவை விட குறைவானது என நினைக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய பந்துவீச்சு தாக்குதல் ஆஸ்திரேலியாவை விட குறைவாக இல்லை என்று நினைக்கிறேன். ஷமி ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

என்னைக் கேட்டால், இந்தியா இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்தியாவிற்கு அருமையாக விளையாடி உள்ளனர். மேலும் உங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களுடன் நீங்கள் செல்ல வேண்டும்.

மேலும் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும், ரன்களை அதிகமாக கொடுக்க மாட்டார். அதுவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையானதை கொடுக்கும். மேலும் ஜடேஜாவின் பேட்டிங் கடந்த சில வருடங்களாக டெஸ்ட் மட்டத்தில் அருமையாக உள்ளது. அஸ்வினிடம் வரும்போது, அவர் இந்த தலைமுறையின் சிறந்தவர்களில் ஒருவர். அவர் ஆழமாக சிந்திக்கிறார், அது அவரை தனித்து நிற்க வைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.