சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கேரளாவில் பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதற்கு அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணம் என்றும், வரும் 8-ம் தேதி தென்மேற்குபருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுவடைந்து நேற்று புயலாக மாறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மாலை உருவானது. இது நேற்று காலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை..: தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கு இந்த புயல் வாய்ப்பாக இருக்கும்.
இந்த புதிய புயல் காரணமாக, வடக்கு கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்று மழைக்கு வாய்ப்பு: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 7-ம் தேதி (இன்று) முதல் ஜூன் 10-ம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் புதன்கிழமை (ஜூன் 7) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
வெப்ப அலை வீசும்: ஒருசில இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஜூன் 7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி வெப்ப நிலையும், குறைந்தபட்ச வெப்ப நிலை 80 டிகிரியை ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை அளவு: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ., கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தலா 7 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியது.