சாகும்வரை உண்ணாவிரதமா.. நாங்க இருக்கோம்.. ஆனா அதுக்காக.. – விவசாயிகளுக்கு சீமான் கோரிக்கை

உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது; கிருஷ்ணகிரி மாட்டம், உத்தனப்பள்ளியில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறிக்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. உயிர் வாழ உணவளிக்கும் வேளாண்மையை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளைக் நிறுவும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு தலைகுனியக் கூடியதாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த ஈராண்டு காலத்தில் ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் 3,500 ஏக்கர் விளை நிலங்களை அழித்து புதிதாகத் தொழிற்வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலங்களை அழித்து புதிய தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4550 ஏக்கர் நிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் என வளர்ச்சி, முன்னேற்றம என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச்செயல்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது.

அக்கொடுஞ்செயல்களின் நீட்சியாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நான்கு தொழிற்வளாகங்கள் ( சிப்காட்) செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 5-வது தொழிற்வளாகம் அமைக்கும் பொருட்டு மேலும் 3034 ஏக்கர் விளை நிலங்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்கிறது.

விளைநிலங்களைப் பறிக்க முயலும் திமுக அரசுக்கு எதிராக வேளாண் பெருங்குடி மக்கள் கடந்த 152 நாளாக அறவழியில் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து களத்தில் நிற்பதோடு, கடந்த ஏப்ரல் மாதம் 3 நாள் பட்டினிப் போராட்டத்தையும் முன்னெடுத்தது. ஆனால், வேளாண் மக்களின் உரிமைப் போராட்டத்தினை துச்சமென கருதி, காவல்துறை மூலம் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு – 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

மேலும், உத்தனப்பள்ளி உரிமைப் போராட்டக் களத்தில் கடந்த 150 நாட்களாகப் போராடி வந்த வேளாண் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா அன்னய்யா அவர்கள் நிலம் பறிபோகும் துயரந் தாளாமல் போராட்டக் களத்திலேயே மரணித்தச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தலைமுறை தலைமுறையாக பெற்ற தாயினும் மேலாக பேணிப் பாதுகாத்த விளைநிலங்களை, வலுகட்டாயமாகப் பறித்து இன்னும் எத்தனை விவசாயிகளின் மரணத்திற்கு திமுக அரசு காரணமாகப் போகின்றது?

ஆகவே, உத்தனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் கொடுங்கொன்மையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைப்போராட்டம் வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்று உறுதியளிப்பதோடு, விவசாய பெருமக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற கடும்போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.