வெப்பநிலை இன்று மேலும் அதிகரிக்கும்: அதிகபட்சமாக 108 டிகிரி பதிவாக வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 6) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, வரும் 7, 8, 9-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

ஜூன் 5-ம் தேதி (நேற்று) காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் 4 செ.மீ., திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், அவிநாசி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் வரும் 9-ம் தேதி வரைகுமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ.வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.