திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இனி பிரச்சனையே இல்லை!

தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் முக்கியமானது திருவண்ணாமலை அண்ணமலையார் கோவில் . இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லபக்தர்கள் கூட்டம் அலை மோதும். தை மாத பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி போன்ற நாட்களில் திருவண்ணாமலையே குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.

அங்குள்ள மலையை சிவனாக வழிபடும் மக்கள் பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள மலையை வலம் வரும் சிவனை வலம் வருதாக நினைத்து கிரி வலம் வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது.

வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை செல்லும் ரயில்கள் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு சென்றடையும். தொடர்ந்து அங்கிருந்து வழக்கம் போல் மயிலாடுதுறை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் ஜூலை மாதத்தில் 2 மற்றும் 3 ஆம் தேதிகள், 30 மற்றும் 31 ஆம் தேதிகள், ஆகஸ்டு மாதத்தில் 30 மற்றும் 31 ஆம் தேதிகள், செப்டம்பர் மாதத்தில் 28 மற்றும் 29 ஆம் தேதிகள், அக்டோபர் மாதத்தில் 27 மற்றும் 28 ஆம் தேதிகள், நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27 ஆம் தேதிகள், டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26 ஆம் தேதிகள் ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது பக்கதர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.