'பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்' – வெள்ளை மாளிகை

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 21-ந்தேதியில் இருந்து ஜுன் 24-ந்தேதி வரை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜுன் 22-ந்தேதி, சுமார் 7 ஆயிரம் இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் முன்னிலையில் வழங்குப்படும் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்கவிருக்கிறார்.

தொடர்ந்து அன்றைய தினம் அமெரிக்க நாடாளுமன்ற இரு சபைகளின்(பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) அழைப்பின் பேரில் அமெரிக்க காங்கிரஸ் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் அமர்வில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாக வெள்ளை மாளிகை சார்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்பு மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

“இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சிறப்பான ராணுவ ஒத்துழைப்பு நிலவுகிறது. மேலும் குவாட் அமைப்பிற்குள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு நிலவி வருகிறது. பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்” என்று ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.