பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து – 13 பேர் பலி

பஞ்சாப்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக நேற்று லாகூரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 34 பயணிகளுடன் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கல்லார் கஹார் சால்ட் எல்லை அருகே வந்த போது திடீரென பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதல்கட்ட தகவலின்படி பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.