உயர்கிறது சினிமா டிக்கெட் கட்டணம்.. தலையே சுத்துதே.. ஸ்டாலின் என்ன சொல்லப் போறாரோ?

சென்னை:
ஏற்கனவே தக்காளி விலை உயர்வே தமிழக மக்களை அடித்து துவம்சம் செய்து வரும் நிலையில், சினிமா டிக்கெட் கட்டணத்தை வேறு உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக கருதப்பட்ட திரைப்படங்கள் தற்போது மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். வெகுஜன மக்களின் வாழ்க்கையையும், சமூக பிரச்சினைகள் சார்ந்த விஷயங்களையும் திரைப்படங்கள் பேசத் தொடங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆனால், என்னதான் திரைப்படங்கள் சமூக பிரச்சினைகளை பேசினாலும் அதை பார்க்கும் மக்களின் பொருளாதாரத்தை பற்றி திரையரங்குகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கொஞ்சம் ஓவர்தான்:
குறிப்பாக, மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்தது முதலாக, தியேட்டர்களுக்கு செல்லவே நடுத்தர வர்க்கத்தினர் பயப்படும் நிலை வந்துவிட்டது. டிக்கெட் கட்டணம் மட்டுமல்லாமல் திரையரங்குகளில் விற்கப்படும் திண்பண்டங்கள், குடிநீர் ஆகியவற்றின் விலையே விண்ணை தொடும் அளவுக்குதான் இருக்கின்றன. உதாரணமாக, பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.150 என்றால் வெறும் காபி ஒன்றின் ரூ.110-ஆக இருக்கிறது. பஃப்ஸ், பாப்கார்ன் போன்றவை ரூ.200-க்கு மேல் விற்கப்படுகின்றன.

தண்ணீர் கூடவா..:
சரி எதுவுமே வேண்டாம்.. தண்ணீரை குடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைத்தால் அதுவும் முடியாது. பல தியேட்டர்களில் குடிநீர் விற்கப்படுவதே இல்லை. குடிநீர் கேனையும் கேண்டீனில்தான் வாங்க வேண்டும். அதுவும் எம்ஆர்பி விலைக்கு அதிகமாகவே விற்கப்படுகின்றன. இதனால் 4 பேர் கொண்ட குடும்பத்தினர் திரையரங்குக்குக்கு செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.2500 வரை செலவாகிவிடுகிறது.

டிக்கெட் கட்டணம் உயர்வு:
இதனால் திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்களில் விலையை முறைப்படுத்த வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அடுத்த இடியை இறக்கியுள்ளன திரையரங்குகள். சினிமா டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த அவர் முடிவு செய்திருக்கின்றன. அதன்படி, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் கட்டணம் ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆகவும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்த முடிவு செய்திருக்கின்றன.

அனுமதிக்குமா அரசு?
இந்நிலையில், இந்த விலை உயர்வை அனுமதிக்கக் கோரி திரையரங்கு உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்ல போகிறது எனத் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.