சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடந்து தளபதி 68 படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
100 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கும் விஜய், புதிய பிஸினஸ் தொடங்கவும் பிளான் செய்துள்ளாராம்.
அதன்படி, பீஸ்ட், லியோ படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் இணைந்து ஹைடெக் ஸ்டூடியோ கட்ட முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய பிஸினஸ் தொடங்கும் விஜய்
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் தளபதி விஜய். கடந்த சில வருடங்களாகவே இவரது மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது எனலாம். ஒரு படத்திற்கு குறைந்தது 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் விஜய், பல வகைகளிலும் அதனை முதலீடு செய்து வருகிறார். அதன் மூலமும் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் விஜய்.
ஏற்கனவே திருமண மண்டபம் உட்பட விஜய்க்கு சொந்தமாக பல பிஸினஸ் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இன்னொரு பிரம்மாண்டமான தொழில் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சென்னை திருவான்மியூரில் பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டி வருகிறாராம் விஜய்.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஹைடெக்காக உருவாகும் இந்த ஸ்டுடியோவில் பல அதிநவீன அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஸ்டுடியோவுக்கான இடம் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிநவீன ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்பது மனோஜ் பரமஹம்சாவின் ஆசையாக இருந்துள்ளது.
ஆனால், அதற்கு பல கோடிகள் செலவு செய்ய வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இதுகுறித்து விஜய்யிடம் கூறியுள்ளார் மனோஜ். பீஸ்ட்டைத் தொடர்ந்து விஜய்யின் லியோ படத்திற்கும் மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். அப்போது, மீண்டும் ஹைடெக் ஸ்டுடியோ குறித்து பேச்சு எழுந்துள்ளது.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த விஜய், ஹைடெக் ஸ்டுடியோ அமைப்பதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து தனக்குச் சொந்தமான இடத்தை மனோஜ் பரமஹம்சா கொடுக்க, அதில் விஜய் தற்போது ஸ்டுடியோ கட்டத் தொடங்கிவிட்டாராம். இருவரது கூட்டணியில் உருவாகும் இந்த ஸ்டுடியோ விரைவில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் முதலீட்டில் உருவாகும் இந்த ஸ்டுடியோவை லியோ தயாரிப்பாளர்கள் லலித்குமார், ஜெகதீஷ் இருவரும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பிஸினஸில் விஜய் முதலீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் முக்கியமாக ஜெகதீஷ் தலைமையில் ‘தி ரூட்’ என்ற நிறுவனம் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.