தமிழ் சினிமாவுக்கு வரும் இன்னொரு ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாக்களுக்கு பஞ்சமே இல்லை. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லட்சுமி மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா நாயர், ஐஸ்வர்யா தத்தா, இப்படி நிறைய உள்ளனர். கூடுதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ளார். இந்த நிலையில் புதிதாக வந்திருக்கிறார் டாலி ஐஸ்வர்யா. மாடலிங் துறையில் 8 வருட அனுபவம் கொண்ட இவர் 'கலைஞர் நகர்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனை படம். சுகன் குமார் இயக்கி உள்ளார், நரேஷ் இசை அமைத்துள்ளார், இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டாலி ஐஸ்வர்யா கூறியதாவது: நடிப்புதான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே 'காதலே கோமாளி' என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். 'கலைஞர் நகர்' படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது.

இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 மணி நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது, அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொக்கேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.

இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது. அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம் பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டோம்.

யுனிவர்சல் ஜீனியஸ் என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி. இதுதவிர தற்போது 'இரவின் கண்கள்' என்கிற சயின்டிபிக் திரில்லர் படத்திலும் 'ஹேப்பி பர்த்டே ஜூலி' என்கிற திரில்லர் மற்றும் 'கடைசி தோட்டா' என்கிற கிரைம் திரில்லர் படங்களில் நடித்து வருகிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன.

மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன். சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதேசமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால் சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.