மலையாளத்தில் மீண்டும் உருவாகிறது ஒரு சூப்பர் ஹீரோ படம்

தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹீரோ படங்களை எடுப்பதற்கு பெரிய அளவில் யாரும் முன் வருவதில்லை. ஹாலிவுட்தில் பல்வேறு விதமான சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து ரசித்தவர்கள், அவற்றை இங்கே எடுக்கும்போது அதை பெரிய அளவில் வரவேற்பார்களா என்கிற சந்தேகம் நிறைய இயக்குனர்களுக்கு உண்டு. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற திரைப்படம் கிராமத்து பின்னணியிலேயே உருவான சூப்பர்மேன் கதைய அம்சத்துடன் வெளியானது. படமும் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது.

சமீபத்தில் கூட தமிழில் அதே பாணியில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, சூப்பர் மேன் மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்த வீரன் என்கிற படம் வெளியானது. இந்த படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் குழந்தைகளிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மலையாளத்தில் உணர்வுபூர்வமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் ரஞ்சித் சங்கர் அடுத்ததாக சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

தன்னுடைய படத்தின் சூப்பர்மேன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தான் வரைந்த பென்சில் ஓவியங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு “அவன் உருவாகி வருகிறான்” என்றும் கூறியுள்ளார். இது சூப்பர்மேன் படம் தான் என்பதை குறிக்கும் விதமாக அவர் வரைந்து உள்ள உருவங்களின் இதயப்பகுதியில் ஜி என்கிற ஆங்கில எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. எஸ் என்றால் சூப்பர் மேன், அப்படியானால் ஜி என்றால் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தற்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.